Thursday, 31 March 2011

கவிதைகள் 2001 - ஆசுரா

சிறகுகள் 
 
சிறகுகள் சுமைகளல்ல ....
எப்போதும் சுகம் தான் 
பறக்கும் திசை தெரிந்துவிட்டால் !
                                     - ஆசுரா 
(பாக்யா ஜன 5-11 ;2001)
 
சினிமா பாடல் 
 
நெற்றிக்கண் திறக்க 
ஆண்டவனும் வரவில்லை!
சுட்டிக் காட்ட 
நக்கீரர்களும்  இல்லை!
தடம் புரண்டு 
ஒலிக்கின்றன .....
தமிழ்த் திரைப்படப் பாடல்கள்!
                              - ஆசுரா
(கல்கண்டு 11 .01 .2001 )   
 
மனம்
 
இன்னும் இன்னும்
முயற்சி செய்து 
பார்க்கலாம் தான்.....
முடிவு தெரியாத
ஒற்றையடிப் பாதையாய்...
நீள்கின்றதே
அவளின் மனம்!
              - ஆசுரா
(சரவணா ஸ்டோர்ஸ் 14 -01 -2001 )
 
வாட கண்ணா வா!
 
இரவல் பிள்ளை வாங்கி
இன்னும் எத்தனை நாள்
பாதமிட்டு  நான் மகிழ?
 
அரிசி மாவில் அச்சிட்ட
அந்த நாளும் இனி இல்லை.....
சாக்பீசால் வரையவும் மனமில்லை
வெறுமையாய் இருக்கின்றன அறைகள்!
 
கிருஷ்ணா
உனக்காகக் காத்திருப்பது அறியாயோ?
"மலடி" பட்டம் விட்டு ஓடிடவே
மகனாய் என் மடியில்
என்று நீ தவழ்வாய்?
 
பதில் சொல்
மழலையாய் உன் பாதம்
என் வீட்டில் பதிந்திடவே .....
நான் காத்திருக்கிறேன்
ஒவ்வொரு கிருஷ்ணா ஜெயந்தியிலும்!
                                -ஆசுரா
(மாலைமதி 18 -01 -2001 )
 

No comments:

Post a Comment